தேசிய மற்றும் மாகாண மட்ட சாதனையாளர்களுக்கு வரவேற்பு

 

-கல்முனை நிருபர்-

கல்முனை கல்வி வலய மருதமுனை கமுஃகமுஃ அல்- ஹம்றா வித்தியாலயத்திலிருந்து சென்று தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதித்த மாணவர்களுக்கு வரவேற்பளித்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஐ. உவைதுல்லாஹ்வின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை பாடசாலை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.

தேசிய மட்ட பேச்சுப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற முஹம்மட் வலீத் பாத்திமா ஜெஸ்னா,  மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் முதலிடம் பெற்ற எஸ்.எம். அபாப், ஏ.எஸ். ஹயானி, சதுரங்க போட்டியில் தனிப்பிரிவில் முதலிடம் பெற்ற எம்.எஸ். ஆயிஷா, ஆங்கில தினப்போட்டியில் மாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்ற எம்.அனுபா ஆகியோரை பாடசாலை சமூகம் வரவேற்பளித்து நினைவுச்சின்னங்கள், பரிசில்கள், பணப்பரிசு, சான்றிதழ்கள், பதக்கங்கள் அணிவித்து பாராட்டி கௌரவித்தது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும், கல்முனை வலயக்கல்வி அலுவலக பணிப்பாளருமான எம்.எஸ்.எஸ். நஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் கே.குணசேகரன், ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல். சஹாப், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் பீ.எம். நஸ்ருதீன், தேசிய மட்ட பேச்சுப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற முஹம்மட் வலீத் பாத்திமா ஜெஸ்னாவின் தந்தையும் உள்ளுராட்சி செயற்திட்ட ஆலோசகருமான எம்.ஐ.எம். வலீத், அவரின் பாரியார் உட்பட பாடசாலை பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த காலங்களிலும் பல்வேறு சாதனைகளை புரிந்து அண்மையில் தேசிய மட்ட பேச்சுப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்த முஹம்மட் வலீத் பாத்திமா ஜெஸ்னாவின் உரையும் இந்நிகழ்வில் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.