யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி

-யாழ் நிருபர்-

யாழ். மாநகர சபையின் முதல்வர், ஆனோல்ட்டின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை விவாதத்திற்கு வந்தது.

ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தின் முதல் வாக்கெடுப்பின்போது அது தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை இன்று இரண்டாவது தடவையாக முன்வைக்கப்பட்டது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது யாழ். மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.தொங்கு சபையே அமைந்தது.

அதில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளின் தயவுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனோல்ட் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால் அவரது நிர்வாகத்தின் மீது சொந்தக் கட்சியினரே குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நிலையே இருந்ததால் வரவு -செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டு தடவை அவரது வரவு -செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால் அவர் பதவி விலகினார்.

அதன் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவரான மணிவண்ணன் தனது கட்சியில் இருந்து பிரிந்து நின்று தனியாக முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். ஈபிடிபி போன்ற மற்றைய கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றிபெற்றார்.

எனினும் அவரது ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டுக்களை சாட்டி அவரது வரவு செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இரண்டாவது வாக்கெடுப்புக்கு விடாமலேயே அவர் பதவி விலகினார்.

அதனால் மீண்டும் பதவிக்கு வந்தார் ஆனோல்ட். ஆனால் அவரது வரவு செலவுத் திட்டத்தை அனைத்து எதிர்  கட்சிகளும் ஒன்றிணைந்து தோற்கடித்தன. இன்று அதன் இரண்டாவது வாக்கெடுப்பு இடம்பெற்றது.

பாதீடு இரண்டாவது தடவை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்.