
அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றுங்கள் என அண்டை நாடுகளுக்கு ஈரான் வேண்டுகோள்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் பிராந்தியத்திலிருந்து “அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்க இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்காவின் பாதுகாப்பு வளையம் என்பது ஓட்டைகள் நிறைந்தது என விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா தருவதாகக் கூறும் பாதுகாப்பு குடை என்பது ஓட்டைகள் நிறைந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. அது பாதுகாப்பைத் தருவதற்குப் பதிலாகப் பிரச்சினைகளையே ஏற்படுத்தியுள்ளது என்று அராகச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக மாற்ற உதவுமாறு சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் அமெரிக்கா தற்போது கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
