வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தகவல்

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்படுவதற்கு முன்னர் பணியகத்தில் பதிவு செய்துகொள்ளும் போது இலவசக் காப்புறுதி ஒன்று வழங்கப்படுகிறது.

அதன் கீழ், இந்த ஆண்டில் இதுவரை 116 தொழிலாளர்களுக்கு 39.76 மில்லியன் ரூபா பெறுமதியான நன்மைகளை பணியகம் வழங்கியுள்ளது.

அதேபோல், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் திட்டத்தையும் பணியகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதற்கமைய, கடந்த 2 மாதங்களில் 5,775 பிள்ளைகளுக்கு 55.63 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விசேட தேவையுடையோராக அடையாளம் காணப்பட்ட 34 பிள்ளைகளுக்கு 660,000 ரூபா நிதியுதவியும், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரின் மருத்துவச் சிகிச்சைக்காக 248,000 ரூபா பணமும் பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அதிகளவிலான வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வெளிநாட்டில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் மரணமடையும் பட்சத்தில், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 6 இலட்சம் ரூபாவாக இருந்த இந்தக் காப்புறுதித் தொகை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.