
லிபியாவில் வரலாறு காணாத கனமழை : 2000 பேர் உயிரிழப்பு
லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக் கிழமை டேனியல் புயல் தாக்கியது.
இதனால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழையால் லிபிய தலைநகர் பெங்காஸி, டெர்னா, பெடா உள்ளிட்ட பல பகுதிகள் பெரும் சேதமடைந்தன.
குறிப்பாக கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. சில அணைகள் இடிந்து விழுந்தன.
இதனால் டெர்னா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அணைகள் இடிந்ததால் வெளியேறிய நீர் குடியிருப்புகளை அடித்துச் சென்றது.
இரவு நேரத்தில் இந்த கோர சம்பவம் நடந்ததால் தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
குடியிருப்பு பகுதிகளில் 10 அடி உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளும் அடித்து செல்லப்பட்டன. இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்ணக்கானோர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களின் எண்ணிக்கை 5000 முதல் 6000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.டெர்னா பகுதியில் திரும்பும் பகுதிகளில் எல்லாம் உடல்கள் கிடப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் அவசரக் குழுவின் உறுப்பினருமான Hichem Chkiouat தெரிவித்துள்ளார்.
வெள்ளம் அடித்து செல்லப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் பாழடைந்த கட்டடங்களை போல் உள்ளன. ஏராளமான கார்களும் சேதமடைந்துள்ளன.
டெர்னா நகரத்தின் 25 சதவீத பகுதி மாயமாகியுள்ளதாகவும் அமைச்சர் Hichem Chkiouat தெரிவித்துள்ளார். தேடுதல் பணி மற்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
லிபியா புயல் காரணமாக வரலாறு காணாத அழிவை சந்தித்துள்ளதால் அதிகாரிகள் தீவிர அவசர நிலையை அறிவித்துள்ளனர். பாடசாலை மற்றும் கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
