
Gen Z தலைமுறையினரின் ‘மௌன விலகல்’
இந்தியாவின் தற்போதைய இளம் பணியாளர்கள் (Gen Z) மத்தியில் ஒரு விசித்திரமான மாற்றம் அவதானிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்கள் தமது வேலைகளை இராஜினாமா செய்யவில்லை, ஆனால் மனதளவில் வேலையிலிருந்து முற்றாக விலகியுள்ளனர். இதனை நிபுணர்கள் ‘மௌன விலகல்’ (Silent Resignation) அல்லது ‘மனக்கசப்புடன் பணிபுரிதல்’ (Resenteeism) என அழைக்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் 46 சதவீதமான இளம் பணியாளர்கள் அதீத வேலைப்பளு (Burnout) காரணமாக வேலையை விட்டு விலகத் திட்டமிட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவில் நிலைமை அவ்வாறு இல்லை.
வேலையில்லாப் பிரச்சினை, அதிகரித்த வாழ்க்கைச் செலவு மற்றும் குடும்ப எதிர்பார்ப்புகள் காரணமாக இந்திய இளைஞர்கள் வேலையை விட்டு விலகுவதை ஒரு சலுகையாகவே கருதுகின்றனர்.
வேலையை விடுவது தோல்வியாகவோ அல்லது பொறுமையின்மையாகவோ பார்க்கப்படுவதால், பல இளைஞர்கள் விருப்பமில்லாத வேலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
“இந்தியாவின் Gen Z இளைஞர்கள் வேலையை நிறுத்தவில்லை, மாறாக, வேலை தங்களை நேசிக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள், என உளவியலாளர் ரித்திகா குப்தா கூறுகிறார்.
இதன் வெளிப்பாடுகள் மிகவும் நுட்பமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Gen Z இளைஞர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்வது,மேலதிக முயற்சிகளை எடுக்காமல் இருப்பது, மற்றும் நிறுவனத்தின் இலக்குகளுடன் உணர்வு ரீதியாக ஒட்டாமல் இருப்பது போன்றவை இதன் வெளிப்பாடாக கருதப்படுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“இளம் பணியாளர்கள் கௌரவமான வேலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் மன அமைதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நிறுவனங்கள் இன்னும் பழைய படிநிலை முறைகளையும், நீண்ட நேர வேலைகளையும் வலியுறுத்துகின்றன. இந்த முரண்பாடே இளைஞர்களின் மௌன விலகலுக்குக் காரணம் என ஸ்ப் ஜெயின் உலகளாவிய முகாமைத்துவப் பாடசாலையின் பேராசிரியர் கலாநிதி உமேஷ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் வெளியேறுவதை விட, அவர்கள் ஆர்வமின்றி நிறுவனத்தில் தங்கியிருப்பதே பாரிய அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
