ட்ரோன் கமெரா மூலம் யானை புகைப்படம் எடுக்க முயன்ற நால்வர் கைது

ட்ரோன் கமெரா மூலம் யானை (அக்போ)வை சட்டவிரோதமாக புகைப்படம் எடுக்க முயன்ற நான்கு இளைஞர்கள் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், ட்ரோன் கமெராவும் ஏனைய சாதனங்களும் புதன்கிழமை மாலை திற்பனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்கள சத்திரசிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சைக்குப் பின் ஒரு அங்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான டஸ்கர் அக்போ விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது திரப்பனை பகுதிக்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.

சந்தேகநபர்கள் மாஹோ, மீதொடுமுல்ல, குருந்தன்குளம், அநுராதபுரம் மற்றும் கம்பஹாவின் புத்பிட்டிய தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

திரப்பனே வானில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் இருப்பதை அவதானித்ததாக பொதுமக்களிடமிருந்தும் இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினூடாகவும் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய ட்ரோன் கமெரா மஹோ பிரதேசத்தில் உள்ள ஒருவருடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், சந்தேக நபர்கள் ட்ரோன் கமெராவைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் கமெரா தொடர்பில் இலங்கை விமானப்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.