முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகர தனது 83வது வயதில் காலமானார்

தென்னிலங்கையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான மகிந்த விஜேசேகர, தனது 83 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மகிந்த விஜேசேகர படுகாயமடைந்தார்.

அதிலிருந்து அவர் உயிர் தப்பிய போதிலும், அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகாலமாக உடல்நலக் குறைபாடுகளினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.