ரயில் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் மூன்று உள்நாட்டு நபர்களும் விபத்துக்குள்ளானதில், ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 70 வயதுடைய ஒருவர் என பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டு உள்ளூர் நபர்களும் ஒரு சிறுவனும் அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்றுவிட்டு, குறித்த பாலத்தின் மீது ஏறி இயற்கைக் காட்சிகளை இரசித்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பாலம் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாலம் என்றே அவர்கள் நினைத்திருந்தனர்.

எவ்வாறாயினும், அந்த நேரத்தில் பெலியத்தையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற கடுகதி ரயில் அந்தப் பாதையில் வந்தபோது, பதற்றமடைந்த அவர்கள் தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்ல முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, குறித்த வெளிநாட்டவர் ரயிலில் மோதி பின்வத்தை கால்வாய்க்குள் விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏனையோர் ரயில் பாலத்திலிருந்து பின்வத்தை கால்வாய்க்குள் குதித்து உயிர்தப்பியுள்ளனர்.

ஆயினும், அவர்களில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவரும், ஒரு சிறுவனும், ஒரு ஆணும் காயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.