போதைப்பொருள் வியாபாரி “பம்போ” அம்பாறையில் கைது!

-அம்பாறை நிருபர்-

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மிஹிதுபுர போதைப்பொருள் வியாபாரி பம்போ மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் குணவர்தனவிற்கு (73734) கிடைத்த ரகசிய தகவலின்படி, கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பம்போ என்ற போதைப்பொருள் வியாபாரியை, அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு தோட்டலக பகுதியில் இருந்து ஹெரோயினை எடுத்துக்கொண்டு, தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தை சோதனை செய்ததில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரை, கைது செய்ய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் முயன்ற போதிலும், அவர் மிகவும் திறமையாக பொலிஸாரை ஏமாற்றி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து, 2677 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டனர்.

சந்தேக நபர், அம்பாறை நகரின், மிஹிதுபுர, நவகம்புர, கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில், அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையில், அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உ.பி.பி.எம்.சாந்த குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.