
அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இரண்டு தரவு மையங்கள் நேரடியாக சேதமடைந்துள்ளதுடன், பஹ்ரைனில் அமைந்துள்ள ஒரு மையமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்தினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வங்கி நடவடிக்கைகள், இணையத்தளங்கள் மற்றும் பல கைப்பேசி செயலிகளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், மின்சார விநியோகம் தடைப்பட்டதால் தரவு செயலாக்க நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்பு அமைப்புகள் இயங்கியதன் காரணமாக, தொழில்நுட்ப உபகரணங்களுக்கு நீரினால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.
நிலவும் பாதுகாப்பற்ற தன்மை காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தமது சேவைகளை பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் உடனடியாக தமது தரவுகளை ஐரோப்பா அல்லது அமெரிக்கா போன்ற பாதுகாப்பான வலயங்களில் அமைந்துள்ள சேவையகங்களுக்கு மாற்றுமாறு அமேசான் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமீரகத்தின் பல முன்னணி வங்கிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்புகள் செயலிழந்துள்ள நிலையில், இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தரவு உட்கட்டமைப்பு மீது போர் தாக்குதல் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பங்களில் ஒன்றாக இது கருதப்படுவதுடன், இதன் காரணமாக பிராந்தியத்தின் டிஜிட்டல் ஸ்திரத்தன்மை தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
