தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் ஆஜர்

 

யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று திங்கட்கிழமை சிட்னி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் நேற்று ஞாயிறுக்கிழமை முன்வைத்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட T20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, யுவதியொருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று ஞாயிறு கைது செய்யப்பட்டிருந்தார்.

சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளையின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை சிட்னி நகர பொலிஸார் பரமட்டா பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்கப்படவில்லை.