
மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரருக்கு விளக்க மறியல்
அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, அம்பிட்டிய சுமனரதன தேரரை விளக்கமறியலில் வைக்க அம்பாறை மாவட்ட நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதியும் வர்த்தகருமான தயா கமகேவை சமூக ஊடகங்களில் பகுத்தறிவற்ற முறையில் விமர்சித்தமை, தேர்தல் காலத்தின் போது வன்முறையை ஏற்படுத்த முயற்சித்தமை, இதற்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் தேர்தல்களின் போது வன்முறையை ஏற்படுத்தியமை மற்றும் ஒருவருக்குச் சொந்தமான கோவிலுக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சுமனரதன தேரர் அம்பாறை நீதவான் நீதிமன்ற அலுவலகத்தில் முன்னிலைப்படுத்திய பின், அம்பாறை மாவட்ட நீதிபதி நவோமி விக்கிரமரத்ன இவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அம்பிட்டிய சுமணரதன தேரர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 23 ஆம் திகதி முதல் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேற முற்பட்ட போது அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
