யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கில் இருந்து விடுதலை

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது

பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் வழக்கின் விசாரணைகளை எதிர்கொள்ளக் கூடிய தகுதியான மனநிலையில் இருக்கின்றாரா? என்பது தொடர்பில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊடாகக் கோரப்பட்டிருந்த விசேட மனநல மருத்துவ அறிக்கையை, பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரதிவாதி விசாரணைகளை எதிர்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை என அந்த மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட மருத்துவ ஆதாரங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, டெய்சி ஃபொரஸ்ட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கு உத்தரவிட்டார்.