மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவின் WUHAN மற்றும் SHANGHAI நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஊரடங்கு விதிகள் அங்கு மிகக்கடுமையாக்கப் பட்டுளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில் புதிதாக 1,658 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர், அறிகுறியற்ற நோயாளிகளாக (Asymptomatic) உள்ளனர் . இது, அதற்கு முந்தைய நாட்களை விட கூடுதலாக இருப்பதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

SHANGHAI நகரில் Yangpu மாவட்டத்தில் வசிக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், வைரஸ் தாக்குதல் முடிவு அறிவிக்கப்படும் வரை அம்மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கட்டுப்பாடுகள்:

2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் Wuhan நகரில் கொரோனா நோய்த் தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. 2020 மார்ச் மாதத்தில், கொரோனா பரவலை உலகளவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்தது. கொரோனா பரவலால் அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், இந்த எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.

நோய்ப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சீனா அரசு ‘பூஜ்ய கொரோனா தொற்று விளைவு’ (Zero Covid policy ) கொள்கையை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக, தற்போதும் கூட பல பகுதிகளில் ஊரடங்கு அமுலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, அங்கே தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெறும் 5,526 ஆக உள்ளன.

தொடர்ச்சியான ஊரடங்கால், சீனாவின் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் கடுமையான பின்னடைவுகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங், மூன்றாவது முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்படுத்துள்ள பின்னடைவுகளை நீக்கும் வகையில், கொரோனா கட்டுப்பாடு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. தங்களது ஒட்டுமொத்த வணிகம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், வருவாய்கள் குறைவதாகவும் குறு மற்றும் பெரு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தன. ஆனால், தற்போது சீன அரசு தனது கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கி இருக்கிறது.