இசை நிகழ்ச்சியில் கைகலப்பு : 5 மாத கர்ப்பிணி தாய் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-

இசை நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்ற 05 மாத கர்ப்பிணி தாயொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் மொரவெவ- 02ம் கண்டத்தில் வசித்து வரும் 05 மாத கர்ப்பிணியான ஜீ.பவித்ரா ரசங்கி (19 வயது) என்ற பெண்ணே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரியவருகிறது.

விகாரையில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சிக்காக கணவனுடன் சென்றதாகவும், கணவரை குழுவொன்று தாக்க முட்பட்ட வேளை, தாக்குதலை தடுக்க முற்பட்ட போது தன்னை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த கர்பிணி தாய் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்