ChatGPT யிடமிருந்து செய்தி எழுதி வாங்கிய செய்தி ஆசிரியர்!

பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழ், வெளியிட்ட செய்தி ஒன்றின் இறுதியில், ChatGPT அளித்த தகவலை நீக்க மறந்த சம்பவம் வைரலாகி பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

செய்திகளை வெளியிடும் ஆங்கில நாளிதழே, ஒரு சிறிய, செய்ய மறந்த தவறால் சமூக வலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது.

கடந்த 12 ஆம் திகதி வெளியான நாளிதழின் வணிகப் பிரிவு செய்திகளில் ஒக்டோபர் மாதத்தில் வாகன உற்பத்தி உச்சம் தொட்டிருக்கிறது என்ற செய்தியின் இறுதியில், சாட் ஜிபிடி அளிக்கும் இறுதி பந்தி தெளிவாக பதிவாகியிருக்கிறது.

அதைப் படிக்கும் யார் ஒருவருக்கும் அது சாட் ஜிபிடி அளித்த தகவல் என்பது நன்றாகத் தெரியும்.

அதனை செய்தி ஆசிரியர் நீக்க மறந்து, அச்சாகி, விற்பனையாகி இன்று சமூக ஊடகங்களில் வைரலாகியும் இருக்கிறது.

இந்த நாளிதழைப் படித்த பலரும், அந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து, கடைசி பந்தியை வட்டமிட்டு தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த பந்தியில் அப்படி என்னத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், “ஒருவேளை உங்களுக்கு வேண்டுமென்றால், என்னால், இந்த செய்தியின் முதல் பந்தியை இன்னும் சிறப்பாக மாற்றியமைத்துக் கொடுக்க முடியும்” என்பதே அது.

இதன் மூலம், அந்த செய்தியை சாட் ஜிபிடி கொண்டு செய்தி ஆசிரியர் உருவாக்கியிருப்பது தெளிவாகியிருப்பதாகவும், சாட் ஜிபிடியைப் பயன்படுத்திய செய்தி ஆசிரியர், கடைசியாக ஒரு முறை செய்தியைப் படித்துப் பார்க்கத் தவறிவிட்டார் என்றும், படித்திருந்தால், இப்படி ஒரு பந்தி இருப்பதை அவர் அறிந்து நீக்கியிருக்கலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.