துறைநீலாவணை மக்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்து சாணக்கியன்..!
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, துறைநீலாவணை கிராம மக்களின் அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும், என அவர் தெரிவித்தார்.
மீனவர்கள் துறையடிக்குச் செல்லும் வீதியை பிரதேச சபை ஊடாக சீரமைக்கும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களுக்கான ஓய்வுபெறும் மண்டபம் புனரமைப்பதற்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விளையாட்டு மைதானம் புனரமைப்பு மற்றும் கலாசார மண்டபம் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அத்துடன், துறைநீலாவணை வைத்தியசாலையில் அவசர நோயாளர் காவு வண்டி வசதி இல்லாமை
காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருவதாக அறிந்த அவர், பிராந்திய சுகாதார பணிப்பாளருடன் கலந்துரையாடி அதனை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதன்போது, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், வட்டார பிரதேச சபை உறுப்பினர் சு.இளமாறன் மற்றும் கிராம மக்கள், மீனவ சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

