காணி முரண்பாடினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது தம்பியை கொன்ற அண்ணன்!

காணி முரண்பாடினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, மூத்த சகோதரன், தமது இளைய சகோதரனைக் கறுவாப் பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் எல்பிட்டிய, படுவன்ஹேன பொல்கஸ்வத்த பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரினதும் வீடுகள் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணியை அளவிடுவதற்காக நில அளவையாளர்கள் வந்து அளவீட்டுப் பணிகளை முடித்துச் சென்றதன் பின்னரே, காணி தொடர்பில் இருவருக்கும் இடையில் இந்த வாய்த்தர்க்கம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் மீது கறுவாப் பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் கீழே விழுந்துள்ளார்.

அதன் பின்னர் குடும்பத்தினர் இணைந்து அவரை உடனடியாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 73 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.

இச்சம்பவம் தொடர்பான சந்தேகநபரைக் கைது செய்வதற்காக எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.