உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் சடலங்கள் தாய்நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றது!

ஈரானின் ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது

காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 சடலங்களும், தற்போது மத்தல விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு, காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவிற்கு அமைவாகவே, குறித்த சடலங்கள் இன்று விமானம் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடற்படை மைல் தொலைவிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ கப்பல் கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் உயிரிழந்த ஏனைய மாலுமிகளின் சடலங்களும், அடுத்தடுத்த கட்டங்களாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.