சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக மேலதிக பஸ்கள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்று திங்கட்கிழமையும் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் குறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படும்.

நாளை உறவினர் வீடுகளுக்குச் செல்லும் மக்களுக்காக, பிராந்திய போக்குவரத்து சபைகள் ஊடாகத் தேவையான பஸ் வசதிகள் செய்து தரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்றும் நாளையும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றும், நாளையும் ரயில் சேவைகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கு மத்தியிலும், கொழும்பிலிருந்து இயங்கும் அனைத்து கடுகதி ரயில்கள் , தபால் ரயில்கள் மற்றும் நகராந்திர கடுகதி ரயில்கள் வழமை போல் இயங்கும்.

பொல்கஹவெல, கொஸ்கம, அவிசாவளை, புத்தளம் மற்றும் காலியிலிருந்து அத்தியாவசிய பணிகளுக்காக கொழும்பு வருவோருக்காக ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மீண்டும் கொழும்பிலிருந்து அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.