12 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்

 

பரீட்சைக்கு பிட் அடிக்க தூக்கி போட்ட கடதாசியை காதல் கடிதம் என நினைத்துக் கொண்டு 12 வயது சிறுவனை ஒரு கும்பல் அடித்தே கொன்றுள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தயா குமார். அங்கு தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

தயா குமார் 5ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவரது சகோதரி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் அந்த சகோதரி 6ஆம் வகுப்பு அரையாண்டு தேர்வு எழுதிய நிலையில், சகோதரிக்கு பிட் கடதாசியை வழங்கி உதவ தயா குமாரும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

தேர்வு அறைக்கு வெளியே இருந்து தயா குமார் பிட் கடதாசியை தூக்கி வீசி சகோதரிக்கு உதவியுள்ளார். அப்போது ஒரு பிட் கடதாசி தவறுதலாக வேறு ஒரு மாணவிக்கு அருகே விழுந்துள்ளது.

அந்த மாணவி தனக்கு தயா குமார் காதல் கடிதம் கொடுத்துள்ளதாக தவறாக புரிந்து கொண்டுள்ளார்.

அந்த மாணவி அதேபள்ளியில் படிக்கும் தனது சகோதரரிடம் இந்த விஷயத்தை கூற, சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வந்து தயா குமாரை தூக்கி சென்று சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.

சிறுவனை அடித்தே கொன்ற கும்பல் அவரின் உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றுள்ளது.

தயா குமாரின் பெற்றோர் மகனை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்த நிலையில், நான்கு நாட்கள் கழித்து தான் சிறுவனின் உடல் பாகங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

பின்னர் விசாரணையில் உண்மை அம்பலமான நிலையில், மாணவியின் அண்ணன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரும் சிறார்கள் என்பதால் சிறார்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.