கம்பத்தோடு அறுத்து திருடப்பட்ட வீதி விளக்குகள்

யாழ்.பருத்தித்துறை – வல்லை வீதியில் அமைக்கப்பட்டிருந்த சோளர் மூலம் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்துடன் சோ்த்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

கரவெட்டி பிரதேசசபையினால் அமைக்கப்பட்ட மேற்படி வீதி விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக,  வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீதி விளக்குகளை சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியாது என்பதுடன், வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை அடியில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவத்தை ஒரு குழுவாகவே செயற்படுத்தியிருக்க முடியும் என கூறும் பொறுப்புவாய்ந்தோா், அப்பகுதியில் இராணுவ முகாமும் அமைந்துள்ள நிலையில் அவா்களும் இது குறித்து கண்காணிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.