இலங்கை தொடர்பில் தமது மக்களை எச்சரிக்கிறது பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் தமது குடிமக்களை அவதானத்துடன் இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளதென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் பற்றாக்குறை போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கிறது என்றும், இதனால் மருத்துவமனைகள் போன்ற பிற சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

மின்சார ஒதுக்கீடு காரணமாக தினமும் மின்வெட்டு ஏற்படுகிறது.

பொருத்தமான பயணக் காப்பீட்டைப் பெறுவதும், அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பது, முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நிலைமை குறித்த போராட்டங்களில், அண்மைய மாதங்களில் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்துள்ளன. இதன் விளைவாக காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டது.

எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் மற்றும் வன்முறை, அமைதியின்மை என்பன குறுகிய அறிவிப்பில் ஏற்படலாம்.

அத்துடன், ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகால விதிமுறைகளும் விதிக்கப்படலாம்.

எனவே, இலங்கைக்கு பயணிக்கும் தமது குடிமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறும் இந்த பயண ஆலோசனை மற்றும் உள்ளூர் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்த அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.