கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்கள்

ஆஸ்திரேலியாவில் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக டி-20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடைபெற்றது. மோசமான வானிலை காரணமாக கனமழை பெய்து இறுதிப் போட்டி தடைபடுமோ என கிரிக்கெட் ரசிகர்கள் அச்சத்தில் இருந்தனர். மழை பெய்யாமல் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் போட்டி முடிந்த உடன் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக நியு சௌத்வேல்ஸ், வடகிழக்கு விக்டோரியா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா சந்திக்கும் நான்காவது கனமழை மற்றும் வெள்ளமாகும். தெற்கு ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகள் பல மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த கனமழை மேசமான வெள்ள சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மழை நீர் அகற்றும் பணியிலும், மிட்பு நடவடிக்கைகளிலும் ஆஸ்திரேலியா அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

நியு சௌத்வேல்ஸ் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மொலோங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொலோங் நகரில் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அதிவிரைவு மீட்பு படையினர் மொலோங் நகரில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈகுவோரோ நகரில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஒழுங்கற்ற கால நிலை ஏற்பட்டு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒழுங்கற்ற காலைநிலையால் விக்டோரிய மாகாணத்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது.