தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் சீனாவில் தொழில் மற்றும் வர்த்தகம் மீண்டும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் கோவிட் தொற்றால் உயிரை இழந்தனர். சிறு, குறு மற்றும் பெரிய தொழில்கள் வரை பாதிக்கப்பட்டு உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவைச் சந்தித்தன. பல்வேறு அலைகளாக உருவெடுத்த கொரோனோ தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவிட்டு தற்போது கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் தற்போது கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருப்பது உலக நாடுகளிடையே பீதியை கிளப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே சீனாவின் சில பகுதிகளில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வந்தது. தற்போது சீனத் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்பொது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் பதிவாகி வருகிறது.

பீஜிங் மாகாணத்தின் மையப்பகுதியான சோயாங் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் தெற்குப்பகுதியின் முக்கியமான தொழில்நகரமான குவாங்சோவ் நகரிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் 7,740 ஆகவும், குவாங்சோவ் நகரில் 2,637 ஆகவும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதனால் இன்று புதன்கிழமை காலை முதல் குவாங்சோவ் மாவட்டம் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனால் தொழில்வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் குழு பரிசோதனைகள் மூலம் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருவதால் வைரஸ் பரவலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிளில் இருந்து வெளியில் தொற்று பரவல் சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருவதால் தொற்றின் வீரியம் அதிகமாகவே இருப்பது தெளிவாகியுள்ளது. எனவே தனிமைப்படுத்துதல், தேவை ஏற்படின் ஊரடங்கு அமல்படுத்துதல் என கட்டுப்பாடு மற்றும் நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சீனாவின் சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.

சீனாவின் முக்கியமான ஏற்றுமதி நகரமான குவாங்சோவ் மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் உலகளாவிய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி, குவாங்சோவ் மாவட்டத்தில் 250 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்றைய ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.v