கல்முனை மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு மீட்கப்படாத மாடுகள் : எமது செய்தியை அடுத்து அதிரடி நடவடிக்கை

-அம்பாறை நிருபர்-

 

கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிககள் நடவக்கை எடுத்துள்ளனர்.

கல்முனை மாநகர எல்லைக்குள் கட்டாக்காலி மாடுகள் நடமாட்டம் குறித்து எமது ஊடகம் அண்மையில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது அவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் மாநகர சபை துரித நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய இப்பிரச்சினையை கல்முனை மாநகர முதல்வர் ஆணையாளர் ,பொறியியலாளர் மற்றும் சுகாதார பிரிவு மேற்பார்வையாளர் மாநகரசபை ஊழியர்கள் இணைந்து மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்து பல கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றி உரிமையாளர்களை பள்ளிவாசல் ஒலிபெருக்கி மற்றும் ஊடகங்கள் வாயிலாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இதன்படி கடந்த மூன்று நாட்களாக மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு மீட்கப்படாத மாடுகள் தொடர்பிலான அறிவித்தல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

பாதைகள் சந்தைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றில் இடையூறாகவும் தொல்லையாவும் காணப்பட்ட குறித்த தொகை கால்நடைகள் கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு,  மாநகர சபைக்கு சொந்தமான காணியினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தமக்குச் சொந்தமான கால்நடைகள் மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டும் இதன் உரிமையாளர்கள் இவற்றை பாரமேற்காமல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

கால்நடைகளை பராமரிப்பதில் மாநகர சபைக்கு உள்ள கஷ்டங்களைக் கொண்டோ மாநகர சபையின் உத்தியோகத்தர்இ ஊழியர் எவருடையதும் ஒத்துழைப்பையோ எதிர்பார்த்து இவ்வாறு கால்நடை உரிமையாளர்கள் செயற்பட்டுள்ளார்கள் என நிரூபிக்கப்படுமாயின் குறித்த நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .இக்கால்நடைகளை பராமரிக்கும் அனுபவம் வாய்ந்த தினக்கூலி பெறக்கூடிய வேலையாட்கள் யாரும் இருப்பின் மாநகர சபையினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இணைக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள கால்நடைகளில் இடப்பட்டுள்ள குறிகள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து உரிமையாளரை அடையாளம் காண்பதற்கும் தகவல்களை எத்தி வைப்பதற்குமாக இந்த அறிவித்தல் பகிரப்படுகிறது.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டாக்காலிகளை கைப்பற்றி உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் நடமாடும் கட்டாக்காலி ஆடு மாடுகள் கைப்பற்றப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படுவதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுத்திருந்தது.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள் சந்தைகள் பஸார்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பாதசாரிகள் பயணிகள் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பெரும் இடையூறுகளையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கி வருகின்ற குற்றச்சாட்டு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறே மைதானங்கள் கடற்கரை சிறுவர் பூங்காக்கள் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் நடமாட்டங்களினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதுடன் குறித்த இடங்கள் மாசுபடுத்தப்பட்டும் வந்திருந்தன.

இவை தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 84 இன் கீழ் கல்முனை மாநகர சபையினால் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவசர பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மக்கள் முகம்கொடுத்து வந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிககள் நடவக்கை எடுத்துள்ளனர்.