எனது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர்- இம்ரான் கான்

தனது வலது காலில் இருந்து 3 குண்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நாடு தழுவிய பேரணியில் ஈடுபட்டு வந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிராபாதில் நவம்பர் 3ஆம் தேதி மாலை அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்.

அப்போது, இம்ரான் கான் மற்றும் அவர் அருகே இருந்தவர்கள் மீது கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நவீத் முகமது பஷீர் என்பவரை பொலிஸார் கைது செய்தனர். ‘இம்ரான் கானை மட்டும் தான் கொலை செய்ய நான் வந்தேன். வேறு யாரும் எனது குறி அல்ல. இம்ரான் கான் மக்களை தவறான வழியில் நடத்துகிறார். அதை என்னால் ஏற்க முடியவில்லை’ என்று அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிஎன்என் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள இம்ரான்கான், ‘என் வலது காலில் இருந்து மூன்று தோட்டாக்களை எடுத்தார்கள். இடதுபுறத்தில் சில துண்டுகள் இருந்தன, அதை அவர்கள் உள்ளே விட்டுவிட்டனர்’ என்று குறிப்பிட்டார். தனது எலும்புகள் சேதமடைந்துள்ளதாகவும், இயல்பு நிலைக்கு திரும்ப 6 வாரங்கள் வரை ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தாக்குதல் தொடர்பாக முன்னரே தனக்கு உளவுத்துறையில் இருந்து தகவல் வந்ததாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “மூன்றரை வருடங்கள் நான் ஆட்சியில் இருந்ததை நினைவில் கொள்ளுங்கள். உளவுத்துறை அமைப்புகளுடன், செயல்படும் பல்வேறு ஏஜென்சிகளுடன் எனக்கு தொடர்பு உள்ளது. புலனாய்வு அமைப்புகளில் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது” என்று தெரிவித்தார்.