விமான இருக்கையிலேயே சிறுநீர் கழித்த பயணி

ஓடும் விமானத்தில் சிலர் அவ்வப்போது எதிர்பாராத செயல்களை செய்து ஊழியர்களையும், சக பயணிகளையும் தொந்தரவில் ஆழ்த்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அப்படித்தான், நியூசிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போதையில் விமானத்தில் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறுநீர் கழித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு பறந்த விமானத்தில் நவம்பர் 2ஆம் தேதி நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹுக்ஸ் என்ற 72 வயது நபர் பயணம் செய்துள்ளார். இந்த விமானப் பயணம் ஆறு மணிநேரம் என்ற நிலையில், அவர் விமானத்தில் ஆறு சிறிய பாட்டில்கள் மது அருந்தியுள்ளார்.இந்நிலையில், குடிபோதையில் இருந்த ஜேம்ஸ் திடீரென்று தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்து கொண்டே தனது பேன்டை கழற்றி சிறுநீர் கழித்துள்ளார்.

இதனால், அவருடன் பயணித்த சக பயணிகள், விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விமானம் பிரிஸ்பேன்னில் தரையிறங்கியதும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்திரேலியா காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

இவர் மீது பொதுமக்களுக்கு தொல்லை தருதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனது குற்றத்தை இவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஓராண்டு நன்னடத்தை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் இது போன்ற அத்துமீறல்களை ஆஸ்திரேலியா ஒரு போதும் ஏற்காது எனக் கூறிய பிரிஸ்பேன் காவல் ஆணையர், மது அருந்திய பயணிகள் தங்களின் செயலுக்கு முழு பொறுப்பை அவர்கள்தான் ஏற்க வேண்டும் என்றுள்ளது.