உலகப்போராக உருமாறும் அபாயம்
பின்லாந்து-ரஷ்ய எல்லையில் நேட்டோ அமைப்பு அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதால், புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவால் ஆத்திரமைடைந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என மேற்குலக நாடுகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தாலும், அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதிலேயே ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போரால் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார முடக்கம் ஏற்பட்டாலும் ரஷ்யா வளைந்து கொடுக்கவில்லை.
உலகின் முக்கியமான உணவு தானிய உற்பத்தியாளரான உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட முடியாமல் போனதால் பல்வேறு உலக நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு வழிகளில் முயன்றும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. போர் இன்று முடிவுக்கு வரும், நாளை முடிவுக்கு வரும் என உலகமே கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், போரை மேலும் தீவிரமாக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி வருவது உலக நாடுகளை மேலும் கவலையடையச் செய்துள்ளது. தற்போதைய நடவடிக்கையாக உக்ரைனுக்கு எதிரான போரில் மேலும் முக்கியமான முடிவு ஒன்றை ரஷ்யா எடுத்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ரஷ்யர்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கட்டாய ராணுவ சேவைக்கு அஞ்சி ரஷ்ய நாட்டு ஆண்கள் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். இதனால் ராணுவத்தில் ஏற்படும் வீரர்கள் பற்றாக்குறையை சரிக்கட்ட புதின் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்ட கமோண்டோக்களை தங்கள் நாட்டு ராணுவத்தில் பணியமர்த்த முடிவு செய்துள்ளார் புதின். அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
அமெரிக்க ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக போரிட்ட சிறப்பு கமோண்டோக்கள், அமெரிக்க ராணுவம் ஆப்கனில் இருந்து வெளியேறிய பிறகு தற்போது ஈராக் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த வீரர்களை உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பணியமர்த்தும் நடவடிக்கைகளையும் தொடங்கிவிட்டார் புதின். இதனால் போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
ஒரு சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என நினைத்த உக்ரைன்-ரஷ்யா போர் 8 மாதங்களை கடந்தும் இன்னும் முடிந்தபாடில்லை. மாறாக மேலும், மேலும் தீவிரமமைடந்து வருவதுதான் கவலையளிக்கிறது. முன்பு, அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என புதின் மிரட்டல் விடுத்திருந்தார். இதைக் கேட்டு உலக நாடுகள் பதறின. ஆனால் போரின் போக்கே மாறி, இப்போது ரஷ்யாவுக்கு எதிராக அணு ஆயுததத்தை பயன்படுத்தும் முடிவுக்கு நேட்டோ அமைப்பு வந்துள்ளது. பின்லாந்து-ரஷ்ய எல்லையில் நேட்டோ அமைப்பு அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை பின்லாந்தும் இப்போது உறுதி செய்துள்ளது.
இதனால் உக்ரைன்-ரஷ்யா போர் உலகப் போராக உருமாறிவிடுமோ என்கிற அச்சம், மேற்குலக நாடுகளை மட்டுமல்ல…. உலக நாடுகளையே பிடித்து ஆட்டுகிறது.
