வாராந்தம் 20 பேர் போதைக்கு அடிமை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதால் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு தந்து இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதனைக் கட்டுப் படுத்துவதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.
என்றாலும் வெளிமாவட்டத்திலிருந்து போதைப் பொருள் இங்கே கொண்டு வரப்படுகிறதா? இல்லையென்றால் கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படுகிறதா? என்பது சரியாகத் தெரியவில்லை. ஆகவே இதனை கட்டுப் படுத்த சகல தரப்பினரும் முன் வர வேண்டும்.
எம்மால் வழங்கப்படும் விழுப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் வாராந்தம் சுமார் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மிகவும் மோசமான நிலை. பெயர் குறிப்பிடப்படாத பல போதைவஸ்துகள் இங்கு உலாவுகிறது, என்றார்.
