
பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.
அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 200 லீற்றர் கோடா, 60 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
