சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற மேலும் 12 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும், 03 பெண்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் 07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.