சட்டவிரோதமாக மாடு கடத்தி சென்றவர் மடக்கி பிடிப்பு

-யாழ் நிருபர்-

அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

வட்டுக்கோட்டையில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் இருந்து நாவாந்துறைக்கு மாட்டினை கொண்டு சென்றவேளை அப்பகுதி மக்களால் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் களத்தில் இறங்கிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன் மாடு மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றை பறிமுதல் செய்தனர்.

மாட்டின் கால்களை கட்டி தலைகீழாக அமர்த்தி சித்திரவதை செய்யும் விதத்தில் மாட்டினை கொண்டு சென்றதால் மிருகவதை சட்டத்தின் கீழும், அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாட்டினை கொண்டு சென்ற குற்றத்தின் கீழும் வழக்கினை பதிவு செய்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.