
திரிபோஷாவில் நச்சுத்தன்மை?
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் அதிகளவு அஃப்ளாடோக்சின்கள் இருப்பதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், திரிபோஷாக்களை வழங்க வேண்டாம் என எந்தவொரு அமைச்சும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையில் அஃப்ளாடோக்சின்கள் அடங்கிய சோளத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டு நிராகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
திரிபோஷ தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாக, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
