யூரியா உரத்தின் விலை குறைப்பு

நாட்டில் யூரியா உரத்தின் விலையை கணிசமான அளவில் குறைப்பதாக உர இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி, 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை ஒன்று 10,000 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 29,000 ஆகும்.

தேயிலைக்கு பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உர மூட்டை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படும் என உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விலை குறைப்பு நாளை புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் பணி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியக் கடன் உதவி மூலம் பெறப்பட்ட யூரியா உர இருப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும், முதல் கட்டமாக ஒரு ஹெக்டேயருக்கு 20 கிலோ யூரியா உரம் விவசாயிக்கு வழங்கப்படும், என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கே உரங்கள் முதலில் விநியோகிக்கப்படும், என அபேரத்ன மேலும் தெரிவித்தார்.