
அம்பாறையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த 70 இற்கும் அதிகமான யானைகள்
அம்பாறை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை, திடிரென சம்மாந்துறை ஊடாக பல பகுதிகளுக்குள் ஊடறுத்த சுமார் 70 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை தொடர்பில், வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் போது, குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதனால் யானைக்கூட்டத்தை பார்வையிட சம்மாந்துறை, வளத்தாபிட்டி பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை பார்வையிட்டனர்
மேலும், இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும், அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மைக்காலமாக யானைக்கூட்டத்தை கட்டுப்படுத்தி காட்டிற்கு விரட்டுவதற்கு, அவ்விடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் வருகை தருவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
