
40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணைக்கு தமது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு உறுதியான நிதித் திட்டமொன்று கடைப்பிடிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நேர்மையை பாதுகாப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல, இதற்கு அரசாங்கத்துடன் இணைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
‘தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஷக்களின் குப்பைகளைக் கழுவும் ஒரு குப்பை லாரியாகும், எதிர்க்கட்சிகள் அத்தகைய குழுவில் சேர வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் தெரிவித்தார்.
