நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம் : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்
இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என, மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு முதல் இத்தடைக்காலம் 60 நாட்கள் மீன் பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.
மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற்பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. தடைக்காலம் முடிவதை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடலுக்குள் செல்வதற்குத் தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் வாங்கி சேகரித்து வருகின்றனர்.
இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு, பகலாக ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களையும் மீனவர்கள் வாங்கி தயார் நிலையில் படகில் ஏற்றி வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன் பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருவதால் சுமார் 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் இன்று பரபரப்பாக காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.