குளவி கொட்டி 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை நிறைவுபெறும் நேரத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில  11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த நேரத்தில் மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகியதோடு, சில மாணவிகள் குளவி கொட்டுக்கு உள்ளாகி மயக்கமடைந்தும் காணப்பட்டனர். .

இவர்கள் உடனடியாக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் குளவி கூடு கலைந்த போது பாடசாலையின் அபாய சமிஞ்சை ஒலி எழுப்பட்டது, இதன் காரணமாக மாணவர்கள் பதற்றத்துக்குள்ளாகினர்.

ஆனாலும், பாடசாலையின் பிரதான வாயில் மட்டுமே திறந்து விடப்பட்டது எனவும், ஏனைய இரண்டு வாயில்களும் பூட்டப்பட்டே காணப்பட்டது என்றும் ஆபத்துகளின் போது மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் எந்த பொறிமுறையும் இன்றி பாடசாலை காணப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.