இலங்கைக்கான இந்திய துணை தூதருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

-மன்னார் நிருபர்-

மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களிலும் ஈடுபட்டு அதனூடாக தங்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானத்தினை பெற்று தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

எனினும், குறித்த இரு மாவட்டங்களிலும் குறித்த தொழிலை மேற்கொண்டு வருகிறவர்களுக்கு தமது தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணையை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய துணை தூதருக்கு இன்று வியாழக்கிழமை  காலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு மட்டும் 78 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 31 ஆயிரத்து 180 லீற்றர் மண்ணெண்ணெய்யும் தேவை என தெரிய வருகின்றது.

அரச தரவுகளின் அடிப்படையில் குறித்த அளவு எரிபொருள் தேவை என்பதை மேற்காட்டி நான் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

இந்த தேவையை முறையே பெற்று தமது வாழ்வாதாரத்தை எவ்விதமான தடையும் இன்றி முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை இவ் இரு மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்ந்த மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

எனவே, மண்ணெண்ணை பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன், என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.