240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் 240 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிட்டமாறுவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்யப்படுவதாக மடூல்சீமை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மடுல்சீமை பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த வியாபார நிலையத்திலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லீற்றர் பெற்றோல் கொள்கலன்கள் 12 மீட்கப்பட்டதோடு, மொத்தமாக 240 லீற்றர் பெற்றோலை கைப்பற்றிய பொலிஸார் 50 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பிட்டமாறுவ பகுதியைச் சேர்ந்த சோமசிரி நிவச ரடகொம்வன என்பவராவார்.
குறித்த சந்தேக நபரை நாளைசனிக்கிழமை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
