
சமையல் எரிவாயுவை 10000 ரூபாவிற்கும் வாங்க தயாராக இருக்கும் மக்கள்
-கல்முனை நிருபர்-
நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர்.
அதனடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் சமையல் எரிவாயு லிற்றோ கேஸ் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டது.
தேவையுடைய மக்கள் வெயிலையும் கவனத்தில் கொள்ளாது நீண்டவரிசையில் நின்று எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.
அம்பாறை மாவட்ட விற்பனை விலை (12.5kg) 4970 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தும், இங்கு ஒரு 12.5kg சமையல் எரிவாயுவை பெற மக்களிடமிருந்து 5000 ரூபாய் அறிவிடப்பட்டது.
இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பிய போது, மக்களிடம் மிகுதியை கொடுக்க எங்களிடம் சில்லறை இல்லையென்று பிராந்திய விற்பனை முகவர் தெரிவித்தார்.
இதனால் பலத்த சலசலப்பு உருவாகியது.
மக்களிடம் இருந்து ஒருவருக்கு 30 ரூபாய் வீதம் பகல் கொள்ளையிடப்படும் இந்த பணத்தினால் மொத்தமாக ஒரு பாரிய தொகை இறுதியில் சேரும் என்றும், ஏற்கனவே விலை அதிகரித்திருப்பதை தாங்கமுடியாமல் திணறும் நாங்கள் இப்போது வெயிலில் காத்திருந்து பகல் கொள்ளை வழங்கவேண்டி உள்ளது, என்றும் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
அத்தியாவசிய தேவையறிந்து இந்த சமையல் எரிவாயுவை 10000 கொடுத்தும் வாங்க தயாராக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகுதியாக உள்ள அந்த 30 ரூபாய்க்குமாக பிஸ்கட் போன்ற மாற்று பொருட்களையாவது வாங்கி மிகுதிப்பணத்திற்கு பகரமாக வழங்கியிருக்க முடியும்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபைக்கு பொதுமக்களினால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

