உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள தெரிவாகியுள்ள மட்டக்களப்பு தமிழர்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு சனசமூக மத்தியஸ்த சபையின் பிரதி தவிசாளராகவும் கடமையாற்றும் வீரச்சந்திரன் குகதாசன் உலக நீதிக்கான அமைப்பின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டு பயணமாகவுள்ளார்.

நீதியமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் மத்தியஸ்த சபை தவிசாளர்கள், சிரேஸ்ட மத்தியஸ்தர்களுக்கென கோரப்பட்டிருந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதியை அணுகுதல், ஊழல் எதிர்ப்பு, சமவுரிமை, பாரபட்சமின்மை, போன்ற நீதிசார் விடயங்களில் உலகளாவிய ரீதியில் சட்டவாட்சியை ஸ்திரப்படுத்த கொள்கை அளவில் உதவும் அமைப்பான உலக நீதிக்கான அமைப்பின் ஒருங்கிணைப்புடன் பிரிட்டிஸ் கௌன்சில், செடார் அமைப்பின் அனுசரணையுடன் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை, அளிக்கையின் அடிப்படையில் 116 நாடுகளின் பிரதிநிதிகள் இதன்போது கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாடு எதிர்வரும் 29.05.2022 தொடக்கம் 03.06.2022 வரையில்  தொர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு இலங்கையிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் 8 பேரில் சிரேஸ்ட மத்தியஸ்தரகளில் ஒருவரான வீ.குகதாசன் மாத்திரமே தமிழராவார்.

சனசமூக மத்தியஸ்த சபையின் வினைத்திறன் சார் அனுபவப் பகிர்வையும், அதனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் தனக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் அங்கு அவர் உரை ஒன்றையும் ஆற்றவுள்ளார் என்பதுடன், இது இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஒரு விடயமாகும்.

இவர் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பதுடன், கிழக்கு பல்கலைக்கழ சமூகவியல் சிறப்பு பட்டதாரியும், சிறுவர் பாதுகாப்பு, உளவளத்துணை மற்றும், ஆங்கிலம், கணணி போன்ற துறைகளில் துறைசார் டிப்ளோமா கற்கை நெறிகளையும், தொழில்வாண்மைசார் பயிற்சியும் பெற்றவர் என்பதுடன், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சின் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிருத்திப் பரப்பில் சிரேஸ்ட முதுநிலை வளவாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.