
வைத்திய துறையில் அலட்சிய போக்கு அறவே இருக்க கூடாது
-கல்முனை நிருபர்-
வைத்திய துறையில் பணியாற்ற கிடைத்தது இறைவன் தந்த பொறுப்பு, இவர்களிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது, என நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ் ஆர் இஸ்ஸதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற நோயாளர் பாதுகாப்பு முறைமைகள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் பிரதான வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம் எச் கே சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்து தர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி எஸ் ஆர் இஸ்ஸதீன் மேலும் கூறியதாவது,
வைத்தியசாலையில் நோயாளரை பொறுப்பேற்றது முதல் அந்த நோயாளி பூரண சுகம் பெறும் வரை அந்த நோயாளி பற்றிய தகவல் பரிமாற்றம் முறையாக இடம்பெறல் வேண்டும்.
சிகிச்சைக்கான பணிக் குழாத்தினரிடம் துல்லியமான தெளிவான சிந்தனை போக்கு அவசியமாகும்.
சிகிச்சை அளிப்பு முறையில் தவறை சுட்டிக் காட்டும் தத்துவம் கட்டிக் காக்கப்படல் வேண்டும் என தெரிவித்தார்.


