பாராளுமன்றத்தில் ரணிலின் காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை – மனோ கணேசன்

-கல்முனை நிருபர்-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது அரசில் பங்குபெற எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அழைப்பு விடுத்தார், நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அவர் எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எனக்கு நன்கு தெரியும், பலவீனம் பற்றி பேச விரும்பவில்லை.

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, அவரது பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் ஒரு இலங்கையராக வரவேற்கிறேன்.

அவரது அரசில் பங்கெடுக்கும் ‘டீல்’ அரசியலையும் நாம் செய்யவில்லை, அதேவேளை, சும்மா ‘களரிகதை’ பேசி ‘பாழ்’ அரசியலும் செய்ய விரும்பவில்லை.

இன்று நாட்டில் உணவு இல்லை, மருந்து இல்லை, எரிவாயு இல்லை, உரம் இல்லை, இவற்றில் எதையாவது அவர் தீர்த்து வைப்பாரேயானால், அதை செய்யட்டுமே.

இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது காலை இழுத்து விட நாம் விரும்பவில்லை, ஒவ்வொரு விஷயமாக அளந்து, நிறுத்து, பார்த்து நல்ல விஷயங்களுக்கு ஆதரவளிப்போம்.

இது தான் பொறுப்புள்ள செயற்பாடு என நினைக்கிறேன், என்று தெரிவித்தார்.