
இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் இடமாற்றம்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ். கல்வியங்காட்டுப்பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்து 10000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ் . மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே விடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரையும் இலஞ்சம் பெற்ற மூன்று பொலிஸாரையும் விசாரணைக்கு அழைத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெற்றுக்கொண்ட பத்தாயிரம் பணத்தினை திருப்பி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரதேசங்களில் இலஞ்சம் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
