30 வருடங்களாக பூட்டப்பட்டுள்ள ஆலயங்களின் சாபமே நாட்டை பாடுபடுத்துகின்றது

-யாழ் நிருபர-

யாழ் காங்கேசன்துறையில் எவ்வித பூசை வழிபாடுகளும் இன்றி சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட இந்து ஆலயங்களின் சாபமே தற்போது நாட்டைப் பாடுபடுத்துவதாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழ் வந்த இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையை நல்லை ஆதீன குருமுதல்வர் சன்னிதானத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசந்துறை பகுதியில் மக்களின் காணிகளை பறித்து ஆடம்பர ஜனாதிபதி மாளிகை கட்டியுள்ள நிலையில் மக்களை இன்னும் மீள் குடியேற்றம் செய்யவில்லை.

ஆனால் அப்பகுதியில் காணப்படுகின்ற நான்கிற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் இன்னும் பூசை வழிபாடுகள் இன்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

அதனுடைய சாபங்களை இன்றைய நாட்டின் நிலைமைக்கு காரணமாகும்.

சடையம்மா மடம் விஷ்ணு கோயில் மற்றும் சிவன் கோயில் உட்பட அப்பகுதியில் பல இந்து ஆலயங்கள் இருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்கள் அதனை விடுவித்து பூசை வழிபாடுகள் இடம் பெற அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் எவ்வித அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல மதத்தலைவர்கள் என்ற ரீதியில் மக்களுடைய பிரச்சினைகளை தெளிவாக எடுத்துரைத்தோம்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்கள் தீர்வு விடயத்தில் அக்கறையாக உள்ள நிலையில், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்குரிய தீர்வும் காணப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரும் உடனிருந்தார்.