
சட்டவிரோத மதுபான உற்பத்தி இடத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு
-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்டப் பகுதியில் 38 வயதான இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த நபரை காணவில்லை என அவருடைய உறவினர்கள் ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று திங்கட்கிழமை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தேடப்பட்ட நபர் சடலமாக இன்று மாலை குறித்த பகுதியில் காணப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் மவுசாகலை தோட்டம் கீழ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கு அருகாமையில் இவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



