நுவரெலியாவில் வர்த்தகர்கள் கடைகளை மூடி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு

-நுவரெலியா-

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சாலையை மறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று  நுவரெலியா நகரில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், கேகாலை றம்புக்கனை பகுதியில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டியும் பொதுமக்கள் பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, பதுளை பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் நுவரெலியா வர்த்தக நிலையத்தில் தொழில் புரிவோர், மாநகர சபை ஊழியர்கள், பொது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், சாரதிகள், அதிபர் ஆசிரியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், அரச தனியார் வங்கி ஊழியர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும், ‘கோ ஹோம் கோட்டா’ என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பிய நிலையில் நுவரெலியா நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.